Archives: அக்டோபர் 2023

தேவனுடைய செட்டைகளின் நிழலில்

எங்கள் அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகில் உள்ள குளத்தில் வாத்து குஞ்சுகளுடன் பல வாத்து குடும்பங்கள் உள்ளன. அந்த சிறிய குஞ்சுகள் மிகவும் மென்மையாகவும் அழகாகவும் இருக்கின்றன. நான் நடந்து செல்லும்போது அல்லது குளத்தைச் சுற்றி ஓடும்போது அவைகளைப் பார்க்காமல் இருக்கமுடியாது. ஆனால் நான் கண்ணில் படுவதைத் தவிர்க்கவும், வாத்துக்களுக்கு ஒரு பரந்த இடத்தைக் கொடுக்கவும் கற்றுக்கொண்டேன். இல்லையெனில், அதனுடைய பெற்றோர்கள் அதற்கு நான் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று அஞ்சி என்னை துரத்தும் அபாயம் நேரிடும். 

ஒரு பறவை தன் குஞ்சுகளைப் பாதுகாக்கும் உருவகத்தை வைத்து தேவன் தன்னுடைய பிள்ளைகளை எவ்வளவு மென்மையாய் பாதுகாக்கிறார் என்று வேதம் அறிவிக்கிறது (சங்கீதம் 91:4). சங்கீதம் 61இல், இந்த வகையான தேவனுடைய பராமரிப்பை அனுபவிக்க முடியாமல் தாவீது திணருவதை நாம் பார்க்கக்கூடும். அவர் தேவனை “அடைக்கலம்” மற்றும் “பெலத்த துருகம்” (வச. 3) என்றும் விவரிக்கிறார். அவர் தற்போது “பூமியின் கடையாந்தரத்திலிருந்து” கூப்பிட்டு, “எனக்கு எட்டாத உயரமான கன்மலையில் என்னைக் கொண்டுபோய்விடும்” (வச. 2) என்று கெஞ்சுகிறார். அவர் மீண்டும் தேவனுடைய “செட்டைகளின் மறைவிலே வந்து அடைவேன்” (வச. 4) என்று உறுதியாய் அறிவிக்கிறார். 

மேலும் தனது வலியையும், குணமடைவதற்கான ஏக்கத்தையும் தேவனிடம் கொண்டுவந்து, தாவீது தனக்கு தேவன் செவிசாய்த்ததை அறிந்து ஆறுதல் அடைந்தார் (வச. 5). தேவனுடைய உண்மைத்தன்மையின் காரணமாக, அவருடைய “நாமத்தை என்றைக்கும் கீர்த்தனம்பண்ணுவேன்” (வச. 8) என்பதை தாவீது நன்கு அறிந்திருந்தார். 

சங்கீதக்காரனைப் போலவே, நாமும் தேவனுடைய அன்பை விட்டு விலகி தொலைவில் இருப்பதை உணரும்போது, நம்முடைய வலியிலும் கூட, அவர் நம்முடன் இருக்கிறார், ஒரு தாய் பறவை தனது குட்டிகளைக் காப்பது போல் நம்மைப் பாதுகாத்து, பராமரித்து வருகிறார் என்பதை உறுதிப்படுத்துவதற்காக நாம் அவருடைய அன்பான கரங்களுக்குள் அடைக்கலம் புகலாம். 

ஸ்மார்ட்போன் இரக்கம்

உங்களுக்கு வாகனத்தில் உணவு கொண்டுவருபவர் தாமதமாக வந்தாரா? அவருக்கு ஒரு நட்சத்திர மதிப்பீட்டை வழங்க உங்களது மொபைலைப் பயன்படுத்தலாம். கடைக்காரர் உன்னிடம் குறும்பாக நடந்து கொண்டாரா? நீங்கள் அவளுக்கு ஒரு விமர்சன மதிப்பாய்வை எழுதலாம். ஸ்மார்ட்போன்கள், ஷாப்பிங் செய்ய, நண்பர்களுடன் பழக, மேலும் பலவற்றைச் செய்ய உதவும் அதே வேளையில், அவை ஒருவருக்கொருவர் மதிப்பிடும் சக்தியையும் கொடுக்கின்றது. மேலும் இது ஒரு பிரச்சனையாக இருக்கலாம்.

ஒருவரையொருவர் இவ்வாறு மதிப்பிடுவது சிலவேளைகளில் சிக்கலாகவும் இருக்கிறது. ஏனெனில் சூழ்நிலையைப் புரிந்துகொள்ளாமல் மதிப்பீடுகள் வழங்கப்படலாம். ஓட்டுநர் தனது கட்டுப்பாட்டை மீறிய சூழ்நிலை காரணமாக தாமதமாய் உணவுகொண்டுவந்ததற்காக மோசமாக மதிப்பிடப்படுகிறார். தன்னுடைய நோய்வாய்ப்பட்ட குழந்தையுடன் இரவு முழுவதும் விழித்திருந்ததினால் கடைக்கார பெண் எதிர்மறையான விமர்சனத்தைப் பெறுகிறார். மற்றவர்களை இப்படி அநியாயமாக மதிப்பிடுவதை எப்படி தவிர்க்கலாம்?

தேவனுடைய சுபாவத்தை தத்தெடுப்பதின் மூலம் இதைத் தவிர்க்கக்கூடும். யாத்திராகமம் 34:6-7 இல், தேவன் தன்னை “இரக்கமும், கிருபையும்” உள்ளவராக காண்பிக்கிறார். அதாவது சூழ்நிலை புரியாமல் நம்முடைய தோல்விகளை அவர் நியாயந்தீர்க்கமாட்டார். “நீடிய சாந்தம்” உள்ளவர் - அதாவது, ஒரு தவறு நிகழ்ந்த மாத்திரத்தில் அதை எதிர்மறையாய் மதிப்பிடமாட்டார். “மகா தயையும்” கொண்டவர் - அதாவது அவருடைய சிட்சைகள் நமது நன்மைக்காகவே, பழிவாங்குவதற்காக அல்ல. “பாவத்தையும் மன்னிக்கிறவர்” - அதாவது நமது வாழ்க்கையை நமது ஒரு நட்சத்திர அந்தஸ்தினால் வரையறுக்க வேண்டியதில்லை. தேவனுடைய குணாதிசயமே நம்முடைய அடிப்படையாக இருக்க வேண்டும் (மத்தேயு 6:33). கிறிஸ்துவின் சுபாவத்தை செயல்படுத்துவதின் மூலம் ஸ்மார்ட்ஃபோன்களின் கடுமையான தன்மையைத் தவிர்க்கலாம்.

ஆன்லைன் யுகத்தில், நாம் அனைவரும் மற்றவர்களை கடுமையாக மதிப்பிடலாம். இன்று ஒரு சிறிய இரக்கத்தைக் கொண்டுவர பரிசுத்த ஆவியானவர் நமக்கு கிருபையளிப்பாராக!

நீங்கள் தேவனை விசுவாசிக்கலாம்

என் பூனை மிக்கிக்கு கண் தொற்றுநோய் ஏற்பட்டபோது, தினமும் கண்களில் சொட்டு மருந்து போட்டேன். அதை நான் இருக்கையில் அமர்த்தி அதற்கு சொட்டு மருந்து போட முயற்சிக்கும்போது, அது சரியாய் உட்கார்ந்து, அந்த மருந்தை வாங்கிக்கொள்வதற்காக தன்னுடைய கண்களை திறந்து காண்பிக்கும். “நல்ல பையன்” என்று அதற்கு பாராட்டுக்கொடுப்பேன். நான் என்ன செய்கிறேன் என்பது அதற்கு புரியவில்லை என்றாலும், அது ஒருபோதும் குதிக்கவோ, சீண்டவோ அல்லது என்னைக் கீறவோ முயற்சிக்கவில்லை. மாறாக, அது என்னிடமாய் நெருங்கி வருவதற்கே முயற்சித்தது. அது சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. என்னை அதனால் நம்ப முடியும் என்பது அதற்கு நன்றாய் தெரியும். 

தாவீது, சங்கீதம் 9ஐ எழுதியபோது, தேவனின் அன்பையும் உண்மைத்தன்மையையும் அவர் ஏற்கனவே அனுபவித்திருக்கவேண்டும். அவர் தன்னுடைய எதிரிகளிடமிருந்து பாதுகாப்பு பெறுவதற்காக தேவனை நாடுகிறார். தேவனுடைய அவருடைய சார்பில் செயல்படுகிறார் (வச. 3-6). தாவீதின் தேவையின் போது, தேவன் அவரை கைவிடவில்லை. இதன் விளைவாக, தாவீது தேவன் எப்படிப்பட்டவர் என்பதை அறிந்து கொள்கிறார். அவர் வல்லமையும் நீதியும், அன்பும் உண்மையும் கொண்டவர். அதனால் தாவீது தேவனை நம்புகிறார். தேவன் நம்பகமானவர் என்பதை அவர் அறிந்திருந்தார்.

நான் மிக்கியை அதன் சிறுபிராயத்தில் தெருவில் ஒரு பட்டினி கிடக்கும் பூனைக்குட்டியாகக் கண்ட இரவு முதல், பல நோய்கள் தருவாயில் அதை கவனித்துக்கொண்டேன். அதனால்; நான் அவருக்குப் புரியாத விஷயங்களைச் செய்தாலும் கூட, என்னை நம்ப முடியும் என்று அதற்குத் தெரியும். இதேபோல், தேவன் செய்யும் சில காரியங்களை விளங்கிக்கொள்ள முடியாவிட்டாலும் அவர் இதுவரை செய்த நன்மைகளை நினைவுகூர்ந்து அவரை அணுகுவது நல்லது. வாழ்க்கையில் கடினமான தருணங்களில் தேவனையே நம்ப முற்படுவோம்.

பொன்னைக் காட்டிலும் விலையேறப்பெற்ற

நீங்கள் எப்போதாவது ஒரு கண்காட்சி விற்பனையில் குறைந்த விலை பொருட்களை வாங்கி, அது நம்பமுடியாத விலைமதிப்புள்ள ஒன்றாக இருக்கவேண்டும் என்று ஆசைப்பட்டதுண்டா? கனெக்டிகட்டில் நடந்த ஒரு மலர் வடிவம்கொண்ட சீன பழங்கால கிண்ணம் வெறும் 35 டாலருக்கு (சுமார் 2800 ரூபாய்) வாங்கப்பட்டது. அதே கிண்ணம், 2021 ஏலத்தில் 700,000 டாலருக்கு (கிட்டத்தட்ட 6 கோடி இந்திய ரூபாய்) விற்கப்பட்டது. இந்த கிண்ணம் பதினைந்தாம் நூற்றாண்டிலிருந்து ஒரு அரிய, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கலைப்பொருளாக மாறியது. சிலர் சிறிய மதிப்புடையதாகக் கருதுவது உண்மையில் பெரிய மதிப்பைக் கொண்டிருக்கும் என்பதற்கு இது ஒரு அற்புதமான உதாரணம். 

உலகம் முழுவதும் பரவியுள்ள விசுவாசிகளுக்கு எழுதும்போது, பேதுரு இயேசுவின் மீதான அவர்களின் நம்பிக்கை எல்லா கலாச்சாரத்தினராலும் நிராகரிக்கப்பட்ட ஒருவர் மீதான நம்பிக்கை என்று விளக்குகிறார். பெரும்பாலான யூத மதத் தலைவர்களால் வெறுக்கப்பட்டு, ரோமானிய அரசாங்கத்தால் சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்து அவர்களின் எதிர்பார்ப்புகளையும் விருப்பங்களையும் நிறைவேற்றாததால், பலரால் பிரயோஜனமற்றவராகக் கருதப்பட்டார். ஆனால் மற்றவர்கள் இயேசுவின் மதிப்பை நிராகரித்த போதிலும், அவர் “தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டதும் விலையேறப்பெற்றதுமாயிருக்கிற ஜீவனுள்ள கல்லாகிய” (1 பேதுரு 2:4) மதிப்பு மிக்கவராய் திகழ்ந்தார். நமக்கான அவரது மதிப்பு வெள்ளி அல்லது தங்கத்தை விட விலையேறப்பெற்றது (1:18-19). மேலும், இயேசுவை நம்புவதற்குத் தேர்ந்தெடுக்கும் எவரும் தங்கள் விருப்பத்தைப் பற்றி ஒருபோதும் வெட்கப்படமாட்டார்கள் என்ற உறுதி நமக்கு இருக்கிறது (2:6).

மற்றவர்கள் இயேசுவை மதிப்பற்றவர் என்று நிராகரிக்கும்போது, நாம் வேறுவிதத்தில் பார்ப்போம். கர்த்தருடைய ஆவியானவர் கிறிஸ்துவின் விலைமதிப்பற்ற பரிசைக் காண நமக்கு உதவுவார். அவர் தேவ குடும்பத்தின் ஒரு அங்கத்தினராய் மாறுவதற்கான விலைமதிப்பற்ற அழைப்பை எல்லாருக்கும் கொடுக்கிறார் (வச. 10).

தொடர்புடைய தலைப்புகள்

> odb

தேவன் உன்னை மறப்பதில்லை

நான் சிறுவயதில் தபால் தலைகளை சேகரித்தேன். எனது பொழுதுபோக்கைப் பற்றி கேள்விப்பட்ட என் தாத்தா, தினமும் தனது அலுவலகத் தபாலில் இருந்து தபால் தலைகளைச் சேமிக்கத் தொடங்கினார். நான் என் தாத்தா பாட்டியை சந்திக்கும் போதெல்லாம், பலவிதமான அழகான முத்திரைகள் நிரப்பப்பட்ட ஒரு உறையை என்னிடம் கொடுப்பார். “நான் என்னுடைய அலுவலில் மும்முரமாக இருந்தாலும் உன்னை நான் மறக்கமாட்டேன” என்று ஒருமுறை என்னிடம் கூறினார். 
பாசத்தை வெளிப்படையாய் காண்பிக்கும் திறன் தாத்தாக்களுக்கு கொடுக்கப்படவில்லை. ஆனால் நான் அவருடைய அன்பை ஆழமாக உணர்ந்தேன். எல்லையற்ற ஆழமான வழியில், “நான் உன்னை மறப்பதில்லை” (ஏசாயா 49:15) என்று சொன்னதினிமித்தம் தேவன் இஸ்ரவேலின் மீது தம்முடைய அன்பை வெளிப்படுத்தினார். விக்கிரகாராதனைக்காகவும் கீழ்ப்படியாமைக்காகவும் பாபிலோனில் துன்பப்பட்ட தேவனுடைய ஜனங்கள், “ஆண்டவர் என்னை மறந்தார்” (வச. 14) என்று புலம்பினர். ஆனால் தம்முடைய ஜனங்கள் மீதான கர்த்தருடைய அன்பு மாறவில்லை. அவர் அவர்களுக்கு மன்னிப்பையும் மறுசீரமைப்பையும் உறுதியளித்தார் (வச. 8-13). 
“என் உள்ளங்கைகளில் உன்னை வரைந்திருக்கிறேன்” (வச. 16) இஸ்ரவேலரிடம் தேவன் சொன்னார். இன்று நமக்கும் அப்படியே சொல்கிறார். அவருடைய உறுதியளிக்கும் வார்த்தைகளை நான் சிந்திக்கையில், அது நம்மீதான அன்பையும் நம்முடைய இரட்சிப்பிற்காகவும் விரிந்திருக்கும் இயேசுவின் ஆணியடிக்கப்பட்ட தழும்புகள் நிறைந்த கைகளை மிகவும் ஆழமாக நினைவூட்டுகிறது (யோவான் 20:24-27). என் தாத்தாவின் தபால் தலைகள் மற்றும் அவரது மென்மையான வார்த்தைகள் போல, தேவன் மன்னிக்கும் தனது கரத்தை அவரது அன்பின் நித்திய அடையாளமாக நீட்டினார். அவருடைய என்றும் மாறாத அன்பிற்காக அவருக்கு நன்றி சொல்வோம். அவர் நம்மை என்றும் மறக்கமாட்டார். 

திருச்சபையாயிரு!

கோவிட்-19 தொற்றுநோயின்போது, டேவ் மற்றும் கார்லா ஒரு தேவாலய வீட்டைத் தேடி பல மாதங்கள் செலவிட்டனர். தொற்று பரவிய காலங்கிளல் சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவது, பல்வேறு தனிப்பட்ட அனுபவங்களை மட்டுப்படுத்தி, அவற்றை மேலும் கடினமாக்கியது. அவர்கள் கிறிஸ்தவ திருச்சபையோடு ஐக்கியம்கொள்வதற்கு ஏங்கினர். “ஒரு திருச்சபையைக் கண்டுபிடிப்பது கடினமானது” என்று கார்லா எனக்கு மின்னஞ்சல் அனுப்பினார். என் திருச்சபை குடும்பத்துடன் மீண்டும் இணைவதற்கான எனது சொந்த ஏக்கத்திலிருந்து எனக்குள் ஒரு உணர்தல் எழுந்தது. “திருச்சபையாக இருப்பது கடினமானது" என்று நான் பதிலளித்தேன். அந்த காலங்களில், எங்கள் திருச்சபை சுற்றியுள்ள மக்களுக்கு உணவு வழங்குதல், ஆன்லைன் சேவைகளை உருவாக்குதல் மற்றும் ஆதரவுடனும் ஜெபத்துடனும் ஒவ்வொரு விசுவாசிகளுக்கும் போன் செய்து நலம் விசாரித்தது. அந்த சேவையில் நானும் எனது கணவரும் கலந்துகொண்டாலும், மாறக்கூடிய இந்த உலகத்தில் நாம் திருச்சபையாய் செயல்படுவது எப்படி என்று ஆச்சரியப்பட்டோம்.  
எபிரெயர் 10:25இல் ஆசிரியர் “சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல்” இருக்கும்படிக்கு ஊக்குவிக்கிறார். ஒருவேளை உபத்திரவத்தின் நிமித்தமோ (வச. 32-34), சோர்வின் நிமித்தமாகவோ (12:3) ஐக்கியத்தை விடும் அபாயம் அவர்களுக்கு நேரிட்டிருக்கலாம். அவர்களுக்கு இந்த தூண்டுதல் அவசியப்பட்டது.  
இன்று, எனக்கும் ஒரு தூண்டுதல் தேவைப்படுகிறது. உங்களுக்கும் தேவைப்படுகிறதா? நடைமுறை சூழ்நிலைகள் நாம் கூடிவரும் திருச்சபையை பாதிக்கும் தருவாயில் நாம் திருச்சபையாய் நிலைநிற்போமா? ஆக்கப்பூர்வமாக ஒருவரையொருவர் ஊக்குவிப்போம். தேவன் நம்மை வழிநடத்துவது போல ஒருவரையொருவர் கட்டியெழுப்புவோம். நம்முடைய வளங்களைப் பகிர்ந்து கொள்வோம். ஆதரவான செய்திகளை பகிர்வோம். நம்மால் முடிந்தவரை சேகரிப்போம். ஒருவருக்கொருவர் ஜெபியுங்கள். நாமே திருச்சபையாக நிற்போம். 

பாரபட்சமும் தேவசிநேகமும்

“நான் எதிர்பார்த்தது நீ இல்லை. நான் உன்னை வெறுக்கிறேன் என்று நினைத்தேன், ஆனால் அப்படியில்லை.” அந்த இளைஞனின் வார்த்தைகள் கடுமையாகத் தெரிந்தது. ஆனால் அவை உண்மையில் கருணை காட்டுவதற்கான முயற்சியாக இருந்தது. நான் அவர் வசிக்கும் நாட்டில் படித்துக்கொண்டிருந்தேன். அவருடைய அந்த தேசம் பல தசாப்தங்களுக்கு முன்னர் என்னுடைய தேசத்தோடு யுத்தம் செய்தது. நாங்கள் ஒன்றாக வகுப்பில் ஒரு குழு விவாதத்தில் கலந்துகொண்டோம். அவர் தொலைவில் இருப்பதை நான் கவனித்தேன். நான் அவரை ஏதாகிலும் புண்படுத்திவிட்டேனா என்று நான் கேட்டபோது, அவர், “இல்லை . . . . அதுதான் விஷயம். என் தாத்தா அந்தப் போரில் கொல்லப்பட்டார், அதற்காக நான் உங்கள் மக்களையும் உங்கள் நாட்டையும் வெறுத்தேன். ஆனால் இப்போது நமக்குள் எந்த அளவிற்கு ஒத்துப்போகிறது என்பதைக் கண்டு நான் ஆச்சரியப்படுகிறேன். நாம் ஏன் நண்பர்களாக இருக்க முடியாது!” என்று பதிலளித்தார். 
பாரபட்சம் என்னும் உணர்வு மனித இனத்தைப் போலவே மிகவும் பழமையானது. இரண்டாயிரமாண்டுகளுக்கு முன்பு, இயேசு நாசரேத்தில் வாழ்ந்ததைப் பற்றி நாத்தான்வேல் முதன்முதலில் கேள்விப்பட்டபோது, அவனுடைய பாரபட்சம் தெளிவாகத் தெரிந்தது: “நாசரேத்திலிருந்து யாதொரு நன்மை உண்டாகக்கூடுமா?” (யோவான் 1:46) என்று சொல்கிறார். நாத்தான்வேல் இயேசுவைப் போலவே கலிலேயா பகுதியில் வாழ்ந்தவர். தேவனுடைய மேசியா வேறொரு இடத்திலிருந்து வருவார் என்று அவர் ஒருவேளை நினைத்திருக்கக்கூடும். மற்ற கலிலேயர்களும் நாசரேத்தை இழிவாகப் பார்த்தனர். ஏனென்றால் அது ஒரு சிறிய அடையாளமில்லாத ஊராக இருந்தது.  
இது மிகவும் தெளிவாக உள்ளது. நாத்தான்வேலின் பதில், இயேசு அவனை நேசிப்பதற்கு தடையாக இருக்கவில்லை. மேலும் அவன் மறுரூபமாக்கப்பட்டு இயேசுவின் சீஷனாக மாறுகிறான். நாத்தான்வேல் பின்பாக, “நீர் தேவனுடைய குமாரன்” (வச. 49) என்று இயேசுவின் மகத்துவத்தை சாட்சியிடுகிறான். தேவனுடைய மறுரூபமாக்கும் அன்பிற்கு எதிராக நிற்கக்கூடிய எந்த பாரபட்சமும் இல்லை.